சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு வயது 58. தற்போது, அவரது இசையில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை நிறைவடைந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏ.ஆர்.ரகுமான் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடுகளுக்கான வழக்கமான பரிசோதனைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்; அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் நலமுடன் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இது தொடர்பாக அவருடைய மகன் ஏ.ஆர். அமீன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”என் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால், சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் நலமுடன் உள்ளார். ரசிகர்கள், குடும்பத்தினர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.












