மும்பை: 10 நாள்களாகத் தொடர் சரிவில் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்து 73,730 புள்ளிகளானது. நண்பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 924 புள்ளிகள் அதிகரித்து 73,934 புள்ளிகளைத் தொட்டு, சற்று இறங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து விற்பனையாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 255 புள்ளிகள் அதிகரித்து 22,337 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் 3% வரை விலை உயர்ந்து வர்த்தகமாயின. டெக் மகிந்திரா பங்கு 3.7%, ஹெச்.சி.எல். டெக் பங்கு 2%, இன்போசிஸ் பங்கு 1.2% விலை உயர்ந்து விற்பனையாயின. அதானி போர்ட்ஸ் 5%, டாடா ஸ்டீல் 4.9%, பவர் கிரிட், எம்&எம், என் டி.பி.சி. பங்குகள் தலா 4% விலை அதிகரித்தன. டாடா மோட்டார்ஸ் பங்கு 3.5%, ஐ.டி.சி. பங்கு 2.6%, பார்த்தி ஏர்டெல் பங்கு 2.5%, நெஸ்லே பங்கு 2% விலை உயர்ந்தன.












