நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியாளர்கள் உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இவர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு சுற்றறிக்கை ஒன்று பரவியது. அந்த சுற்றறிக்கையில், “மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 2 அதிகரிக்கப்பட்டு, 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
அனுபவமிக்க பணியாளர்கள் கூடுதலாக 2 ஆண்டுகள் சேவை செய்வதன் மூலமாக மத்திய அரசுக்கு உதவ முடியும். இந்த திட்டத்தால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான செலவும் குறையும். பணியாளர்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதால், அதற்கான செலவும் அரசுக்கு கணிசமாக குறையும்.
மேலும் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1998-ம் ஆண்டு 61.4 ஆண்டுகள் என்றிருந்தது. இது 2024-ஆம் ஆண்டு 72.24 ஆண்டுகள் ஆக அதிகரித்திருக்கிறது. இதுவும் மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 2 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












