தென்மாவட்டங்களில் ஆலயங்களுக்கும் ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கும் பாதுகாவலாகவும், வேண்டுமானால் தனது உயிரையும் கொடுக்கச் சபதம் பூண்ட பலர் இருந்தனர். இவர்களுக்கு வைராவிகள் என்பது பெயர். இப்படி வைராவிச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் பைரவ மூர்த்தியின் அம்சமாகவே போற்றப்பட்டனர். இவர்கள் பணியின் போது உயிர் துறந்தால் இவர்களுக்குத் தனி ஆலயம் அமைத்து வைராகிப் பெருமாள், வைராவிக் கோன் எனப் பெயரிட்டு வழிபட்டனர். இவர்களுடைய வம்சா வழியினருக்கு உதிரப்பட்டி என்ற பெயரில் நிலதானமும் செய்தனர்.
வைராவிச் சேவை செய்தவர்கள் நீண்ட கத்தியையும் அதில் நீண்ட சங்கிலியால் பிணிக்கப்பட்ட மணியையையும் ஏந்தி அதை சுவாமி ஊர்வலத்திற்கு முன்பாக ஒலித்துக் கொண்டே சென்றனர். திருவிடைமருதூர், கீழ் வேளூர், திருப்பத்தூர் முதலிய அநேக தலங்களில் வைராவிகள் சேவை செய்துள்ளனர்.கொங்குமண்டல சதகம் என்ற நூல் கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட பல சிவாலயங்களுக்கு வைராவிச் சேவர்கள் நியமிக்கப்பட்டதைக் தனிச் சிறப்புடன் குறிப்பிடுகிறது.
திருப்பரங்குன்றத்தில் வைராவியாகயிருந்த குட்டியாப் பிள்ளை என்பவர் ஐரோப்பியர் படையெடுப்பிலிருந்து முருகன் ஆலயத்தைக் காக்க கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்நீத்தார். இந்தச் செய்தி இக்கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவருடைய வம்சத்தாருக்கு உதிரபட்டியாக நிலமளித்ததையும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. தென்னிந்தியாவிலுள்ள அனேக ஆலயங்களில் வைராவிச் சேவை செய்து தெய்வநிலை பெற்றவர்களின் திருவுருவங்கள் உள்ளன. பஞ்ச பைரவத்தலமான ராமகிரி பைரவர் ஆலயத்தில் வாயிலின் இருபுறமும் இரண்டு வைராவிகளின் திருவுருவச் சிலைகள் நிலைப்படுத்தி வணங்கப்படுகின்றன.
பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?
பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் ரத்தத்தைச் சுவைப்பதுபோலவும் அமைத்துள்ளனர்.அபூர்வமாகச் சில தலங்களில் நான்கு நாய்களுடனும் பைரவர் அமைக்கப்பட்டுள்ளார்.
சந்நதியில் நாய்
உருவத்தைச் செய்து வைத்துள்ளனர். இதனால் இங்கு நிறைய நாய் சிலைகள் இருக்கின்றன. பிள்ளைப் பேறு வேண்டி இக்கோயிலை வலம் வரும் பெண்கள் இதிலொரு நாய்வடித்தை மடியில் கட்டிக் கொண்டு வலம் வந்தபின் அதை அங்கேயே வைத்துவிட்டு வருகின்றனர். மல்லாரி சிவர் என்னும் பைரவர் ஏழு நாய்கள் சூழ இருப்பதாக மல்லாரி மகாத்மியம் கூறுகிறது. பூர்வகாரண ஆகமத்தில் ஆதியில் வேதம் காளை வடிவம் கொண்டிருந்து என்றும் கலியின் கொடுமையால் வலிமையிழந்து இப்போது நாயுருவில் உள்ளது என்றும், அதுவே பைரவருக்கு வாகனமாகியது என்றும் கூறுகிறது. பல்வேறு சமய நூல்களும் வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக இருக்கிறது என்று குறிக்கின்றன. இதையொட்டி பைரவருக்கு நாய் கொடியாகவும் உள்ளது. ஸ்ரீருத்ரத்தில் இறைவன் நாயாகவும், நாயின் தலைவனாகவும் கூறப்படுவது இங்கே எண்ணத்தக்கதாகும். பைரவரின் நாய்க்கு ‘‘சாரமேயன்’’ என்பது பெயராகும்.









