ஜம்மு காஷ்மீரில் இசட் வடிவ சுரங்கப்பாதையை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.2,700 கோடி செலவில் 6.5 கிமீ தொலைவுக்கு இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் லடாக் பிராந்தியத்திற்கு ஆண்டு முழுவதும் தடையின்றி செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலா தலமான இப்பகுதி, பனிச்சரிவு, மோசமான வானிலை காரணமாக துண்டிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இந்த சுரங்கப்பாதையை கந்தர்பால் பகுதியில் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து சோனாமார்க் பகுதியில் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி கந்தர்பால், சோனாமார்க்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












