கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமான விரதம் கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும்.
சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சந்திரன் சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்.
திருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும். அன்றைய தினம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
வழிபாட்டு முறை: கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரத்தன்று அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவ பெருமானின் படம், சிவ லிங்கம் அல்லது முருகப் பெருமான் படத்தை எடுத்து வைத்து அதற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். கார்த்திகை சோம வாரத்தன்று வில்வத்தால் சிவனுக்கும், முருகப் பெருமானுக்கும் அர்ச்சனை செய்தால் கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்ட பலன் கிடைக்கும். வில்வம் கிடைக்கவில்லை என்றால் மற்ற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டில் ஒரு அகலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக கற்கண்டு, பால், வெற்றிலை பாக்கு, பழம் என எது கிடைக்கிறதோ அதை படைத்து வழிபடலாம்.
கார்த்திகை சோமவாரத்தன்று சிவ புராணம், கோளறு பதிகம் ஆகிய சிவ மந்திரங்கள், கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்ற மந்திரங்களை படிப்பது மிக சிறப்பானதாகும். மாலை 6 மணிக்கு பிறகு மீண்டும் வீட்டில் நெய் விளக்கேற்றி, வழிபட வேண்டும். அன்றைய தினம் ஷட்கோண தீபம் ஏற்றுவதும் சிறந்தது. சிவ பெருமானை மனதார வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். எளிமையாக பால், பழம் மட்டும் நைவேத்தியமாக படைத்து வழிபட்டு, அவற்றை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது சோமவாரத்தில் பல விதமான உணவு சமைத்து படையல் போடும் வழக்கம் இருந்தால் படையல் இட்ட நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு அன்றைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.












