புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடியவர் ஜான் குமார். இவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார். எம்எல்ஏ ஜான் குமார், ஆரம்பக் கட்டத்தில் லாட்டரி விற்பனை செய்து வந்தார். அவரது குருவாக லாட்டர் தொழிலதிபர் மார்ட்டின் உள்ளார்.
இன்று புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்கள் என எட்டு பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிச்சர்ட் எம்எல்ஏ பேசும்போது, “காமராஜர் நகர் தொகுதிக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வந்துள்ளார். தனது தந்தையை விட பல மடங்கு செய்வார். திறமையானவர். எல்லா பலமும் உடையவர்” என கூறினார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனின் அரசியல் வருகையை குறித்து ஜான் குமாரிடம் கேட்டதற்கு, “நன்றாக படித்தவர். பல மொழி தெரிந்தவர். உலக நாடுகளை சுற்றி, அங்கிருப்பதை புதுச்சேரியில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளார்” என்று கூறினார்.
மும்பையில் வசித்து வரும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி அரசியலில் குதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “புதுச்சேரி அரசியலில் களம் காண இருப்பதாக சொல்லப்படுகிறதே?” என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். அரசியலில் களம் காண்பது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.










