ஆஸ்கர் மேடையைப் போலவே மீண்டும் ஒரு முறை ஹாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிருத்விராஜ் நடிப்பில் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத் திரை உலகிற்குத் திரும்பி இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் இடம் பெற்ற பாடலும் பின்னணி இசையும் பலரது பாராட்டுக்களைப் பெற்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில், ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்துக்குச் சிறந்த பின்னணி இசைக்கான ’ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி விருதைப் பெற்றுக் கொண்டார். கடந்த 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிகம் விற்பனையான ‘ஆடு ஜீவிதம்’ என்ற புத்தகத்தின் தழுவலாக அதே பெயரில் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது இந்தப் படம். நஜீப் என்ற நபர் சவுதி அரேபியாவுக்குச் சென்று பாலைவனத்தில் எதிர்கொண்ட துயரங்களைப் படம் தத்ரூபமாகக் காட்சிபடுத்தியிருந்தது.










