Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • இந்தியா
  • சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம் 6 மணி நேரத்திற்கு மேல் தரிசனத்துக்கு காத்திருப்பு…
இந்தியா

சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம் 6 மணி நேரத்திற்கு மேல் தரிசனத்துக்கு காத்திருப்பு…

Email :11

சபரிமலையில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒருசில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தையும் தாண்டியது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர். கடந்த இரு வாரங்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டி விட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், அரவணை, அப்பம் பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதாலும், இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 12 நாட்களில் ரூ.63 கோடி வருமானம்
    திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நேற்று நிருபர்களிடம் கூறியது: சபரிமலையில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் எந்த சிரமும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் 28ம் தேதி (நேற்று முன்தினம்) தான் மிக அதிகமாக 87,999 பேர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். இந்த வருடம் சபரிமலை கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது.
  • நடைதிறந்த 12 நாட்களில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.63.01 கோடியாகும். இது கடந்த வருட வருமானத்தை விட ரூ.15.81 கோடி அதிகமாகும். இந்த வருடம் அரவணை பிரசாத விற்பனை மூலம் தான் அதிகமாக ரூ.28.93 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த வருட விற்பனையை விட ரூ.9.53 கோடி அதிகமாகும். அப்பம் விற்பனை மூலம் இந்த வருடம் ரூ.3.53 கோடி கிடைத்துள்ளது.
  • சிறுவர், சிறுமிகள் செல்ல தனி நுழைவாயில்
    சபரிமலை தரிசனத்திற்கு 10 வயதுக்கு உட்பட்ட ஏராளமான சிறுவர் சிறுமிகளும் வருகின்றனர். இவர்களுக்கு எளிதில் தரிசனம் செய்வதற்காக 18ம் படிக்கு மேல் சிறப்பு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயில் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யலாம். சிறுவர், சிறுமிகளுடன் பெரியவர் ஒருவரும் செல்லலாம். இந்த வரிசையில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பஸ் கவிழ்ந்து 15 திருத்தணி பக்தர்கள் காயம்
    திருத்தணியை சேர்ந்த 20 பக்தர்கள் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு வந்து கொண்டிருந்தனர். பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே இந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் 9 பேர் ஆலத்தூர் அரசு மருத்துவமனையிலும், 6 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts