ஃபிடே உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியின் 5வது சுற்றில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடன் நேற்று மோதிய இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சிறப்பாக ஆடி டிரா செய்தார். தற்போதைய உலக செஸ் சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையில் 14 ரவுண்டுகள் கொண்ட போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள 4 சுற்றுகளில், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். இரு போட்டிகள் டிரா ஆகின.
இதனால், 2 புள்ளிகளுடன் இருவரும் சம நிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 5ம் சுற்று போட்டி நடந்தது. வெள்ளைக் காய்களுடன் குகேஷ் ஆட்டத்தை துவக்கினார். குகேஷ் தவறு செய்தால் ஆட்டத்தை வசப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புடன் லிரென் காத்திருந்தார். அப்படிப்பட்ட தவறுகளை குகேஷ் போட்டி முழுவதும் செய்யாததால் லிரென் ஏமாற்றம் அடைந்தார்.
இருவரும் பெரியளவில் காய்களை இழக்காமல் திடமான நிலையில் இருந்ததால், 40 நகர்த்தலுக்கு பின் வேறு வழியின்றி டிராவில் முடித்தனர். இதனால், தலா 2.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் உள்ளனர். இன்னும் 9 ரவுண்டுகள் ஆட வேண்டி உள்ளது. இப்போட்டியில் 7.5 புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் பட்டம் பெற்றதாக அறிவிக்கப்படுவார்.












