வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக புதிதாக வழக்கு எதுவும் தொடரக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த போது வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ, அப்படியே தொடர வேண்டும் என்பது சட்டம் ஆகும். இந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். சட்டத்துக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இருதரப்பு மனுக்களையும் விசாரித்த உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. அதே நேரம், சட்டம் இருந்தபோதிலும் ஞானவாபி மசூதி, சம்பல் ஜாமா மசூதிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை எழுந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்வது தொடர்பாகவும் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் வழிபாட்டுத் தலங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமும் புதிய வழக்கை பதிவு செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்தது.












