மலையாளத்தில் ஏராளமான டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர் திலீப் சங்கர். இவர் சாப்பா குரிசு, நார்த் 24 காதம் உள்பட மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில தினங்களாக ஒரு மலையாள டிவி தொடரில் நடிப்பதற்காக இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அறைக் கதவை உடைத்து திறந்து பார்த்த போது நடிகர் திலீப் சங்கர் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகர் திலீப் சங்கரின் சாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












