அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் இன்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விஜய், ‘பெண்களின் பாதுகாப்பு அவசியமாகிறது. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து மனு அளித்துள்ளார். இந்த சந்திப்பில் ஆளுநரிடம் விஜய் 30 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் புயல் பாதித்த பகுதிகளுக்காக தமிழக அரசு கேட்டபடி வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விஜய் முன் வைத்து கவர்னரிடம் மனு அளித்துள்ளார். பிறகு வெளியே வந்த விஜய்யின் காரை நிருபர்கள் மறித்து கேள்வி கேட்க முற்பட்டனர். ஆனால் காரை நிறுத்தாமல் விஜய் சென்றுவிட்டார்.












