தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
2017 முதல் 2022 வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட நிதியின் மொத்த தொகை ₹1074 கோடி. 2017 முதல் 2020 வரை தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹22.94 கோடி. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை தலா ₹3 கோடி. 2021-22ல் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹11.86 கோடி. ஆனால், சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹198.83 கோடி. ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியையும், மற்ற இந்திய மொழிகளுக்கு மிகமிக குறைவான நிதியையும் ஒதுக்கி பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் மொழியைப் பற்றி பிரதமர் மோடி மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசியது தமிழர்களை ஏமாற்றுகிற அரசியல் மோசடியாகும். பிரதமர் மோடி, எத்தனை முறை இத்தகைய பாசாங்கு நாடகங்களை நடத்தினாலும் அவர் விரிக்கிற மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












