கோவையை சேர்ந்த இஸ்லாமியர்களை புனிதப்பயணம் ‘உம்ரா’ அழைத்து செல்வதாக ரூ.36.50 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த ஏஜென்ட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்தவர் அமீதா (62). இவர், இஸ்லாமியர்களின் புனிதப்பயணமான உம்ரா அழைத்து செல்வதற்கான ஏற்பாட்டினை செய்து வந்தார். இதற்காக கோவை உக்கடம், கடைவீதி, கோட்டைமேடு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் 66 பேர் உம்ரா பயணம் செல்வதற்காக அமீதாவிடம் ரூ.36.50 லட்சம் கொடுத்தனர்.
இந்த பணத்தை அமீதா சென்னை புரசைவாக்கம் பெருமாள்பேட்டையை சேர்ந்த ஜாபர்அலி (45) என்பவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஜாபர்அலி ‘தாஸ் உம்ரா சர்வீஸ்’ என்ற நிறுவனத்தில் ஏஜென்டாக உள்ளார். ஆனால், அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின் ஜாபர்அலி இஸ்லாமியர்களை உம்ரா அழைத்து செல்வதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இதுகுறித்து அமீதா கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அமீதா, கடைவீதி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் ஏஜென்ட் ஜாபர்அலி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.












