கடலூர் சில்வர் கடற்கரையில் அலை சீற்றத்தால் 250 மீட்டர் தூரம் வரை மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், சென்னை மெரினா கடற்கரையை அடுத்து 2வது பெரிய கடற்கரையாக விளங்குகிறது. அவ்வப்போது ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், கடல் அலையின் சீற்றம் அதிகரிப்பதின் காரணமாகவும் தற்போது அந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நீரில் அடித்து செல்லப்பட்ட நடைபாதை பகுதி மற்றும் கூம்பு வடிவ கூண்டும் தற்போது வெளியே தெரிகிறது. மேலும் மண் அரிப்பு காரணமாக தற்போது கடல் அலைகள் பொதுமக்கள் அமரும் இடம் வரை வந்து செல்கின்றன. சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு கடலில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரை மணலில் அமர அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலை நீடித்தால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது சில்வர் பீச்சை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே முதற்கட்டமாக கடல் அலையின் சீற்றத்தால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க கடற்கரையை சுற்றிலும் கற்கள் கொட்டும் பணியை உடனே தொடங்க பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.












