Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • அரசியல்
  • இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனு….
அரசியல்

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனு….

Email :17

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பதில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், “அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் கிடையாது. அவ்வாறு உறுப்பினர் இல்லாத ஒருவர் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரமும் இல்லை. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அப்படி இருக்கும் போது மனுதாரர் சூர்யமூர்த்தி கடந்த 2013ல் உள்ள உறுப்பினர் அட்டை எண்ணை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அது ஏற்புடையது கிடையாது. ஏனெனில் அந்த ஆண்டுக்கு பின்னர் அவர் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை. எனவே அவர் கட்சியின் ஒரு உறுப்பினர் கிடையாது.

மேலும் மனுதாரர் சூர்யமூர்த்தி அதிமுக வுக்கு எதிராக வேறு ஒரு கட்சியின் (எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி) சார்பாக 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். எனவே இவரை போன்றவர்களால் முகாந்திரம் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கவோ அல்லது அந்த மனுவுக்கு விளக்கம் கேட்டிருக்கவோ கூடாது.

எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. மேலும் கட்சியின் உள்விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது. இதனை நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. அதேபோன்று கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக இந்த மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையும் கிடையது என்பதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்ற சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts