டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் அடர்பனியான சூழல் நிலவுகிறது. பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் காணப்படுகிறது. கடும் பனியால் குளிரான காலநிலையும் உள்ளது. இதனால், காலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அடர் பனி காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. அடர் பனி மூட்டம் போர்வை போல இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் பார்க்கும் திறன் மிகவும் குறைவாக இருந்ததாகவும், இதனால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் வந்தே பாரத், ஷதாப்தி மற்றும் ஹம்சபர் உள்ளிட்ட ரயில்கள் காலதாமதத்துடன் இயங்குகின்றன. பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு சென்று சேரும் ரயில்களும் பல மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில் பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.












