மலப்புரத்தில் கோயில் திருவிழாவில் மதம் பிடித்த யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து 17 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கோவில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட யானை மிரண்டு பக்தர்களை தூக்கி வீசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் புதியங்கடி பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த விழாவில் 5க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஸ்ரீகுட்டன் என்ற யானையும் அடங்கும்.
அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பக்தர்கள் கூட்டத்தில் உலா வந்தன. அப்போது யானை ஸ்ரீகுட்டன் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென மிரண்டது. அப்போது அந்த யானை சில பக்தர்களை துப்பிக்கையால் பிடித்து தூக்கி சுழற்றி எறிந்தது. இதனால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.
மேலும் யானை மீது அமர்ந்திருந்தவர்களும் கீழே விழுந்தார்கள். இந்த சம்பவத்தில் 17 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோட்டக்கல் பகுதியில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். யானை தும்பிக்கையால் பக்தர் ஒருவரை தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார். பலத்த காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












