‘இந்திய, இலங்கை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையம் சார்பில் பாசி வளர்க்கும் மீனவப் பெண்கள் மற்றும் கடலில் கூண்டு அமைத்து மீன்கள் வளர்க்கும் மீனவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்திய, இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஒன்றிய, மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்திய, இலங்கை இரு நாட்டு மீனவர்களையும் நேரில் சந்திக்க வைத்து உரிய பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.












