விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி பானை சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து பானை சின்னத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; விசிகவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












