கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாநாட்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உயர்வதை கட்டுப்படுத்த வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 2024ம் ஆண்டு தொழில்துறைக்கு முந்தைய ஆண்டுக்கு (1850 முதல் 1900 வரையிலான காலகட்டம்) பிறகு முதல் முறையாக உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் தாண்டியிருப்பதாக ஐரோப்பிய யூனியனின் கோபர்நிகஸ் பருவநிலை மாற்ற சேவை மையத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பமான ஆண்டாகவும் 2024 முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் கடந்த ஆண்டில் 11 மாதங்கள் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து அபாய இலக்கை தாண்டி உள்ளது.







