சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலை வளாகத்தின் வெளியே அதிமுக மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. முன்பு தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற முயன்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அதிமுகவினர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்நது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களுக்கு கருப்பு பட்டை அளிக்க முயன்ற, அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமசந்திரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












