காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்தும் குழுவுக்கு, சட்டமன்ற தொகுதி வாரியாக அமைப்பாளர்களை நியமித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம், நகரம், மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தோடு இயக்க சீரமைப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக பெருங்கோட்ட அமைப்பாளர்கள், நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெருங்கோட்ட அமைப்பாளர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கும் பணிகளில் சிறப்புடன் செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.
நமது எதிர்கால லட்சியம், காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்திலே கொண்டு வருவது என்பது தான். அதனை அடைவதற்கு, நமது இயக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவது இன்றைய தேவையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












