உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் மகளிர் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். பிளிட்ஸ் ஓபன் பிரிவில் மேக்னஸ் கார்ல்சன் – இயான் நெபோம்னியாட்சி கூட்டு சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஸு ஜினெருடன் மோதிய வைஷாலி, 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இருப்பினும் அரை இறுதியில் மற்றொரு சீன வீராங்கனை ஜு வென்ஜுனுடன மோதிய வைஷாலி, 0.5-2.5 புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவியதால், அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
செஸ் பிளிட்ஸ் மகளிர் போட்டியில் சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். அரை இறுதியில் வைஷாலியை வென்ற ஜு வென்ஜுன், இறுதிப் போட்டியில் சக சீன வீராங்கனை லெ டிங்ஜீயுடன் மோதினார். பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் 3.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற வென்ஜுன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் வெண்கலம் வென்ற வைஷாலிக்கு இந்தியாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளிட்ஸ் ஓபன் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் உலக நம்பர் 1 வீரரான நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் – ரஷ்யா வீரர் இயான் நெபோம்னியாட்சி மோதினர்.
3 போட்டிகளில் ஆடியும் வெற்றியாளரை தீர்மானிக்க முடியாததால் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்து கொள்வதென அவர்கள் முடிவெடுத்தனர். அதற்கு உலக செஸ் நிர்வாக அமைப்பான ஃபிடே ஒப்புக்கொண்டதால் இருவரும் கூட்டு சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர். செஸ் பிளிட்ஸ் வரலாற்றில் முதல் முறையாக இருவர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹான்ஸ் நீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘செஸ் உலகம் ஜோக்காக மாறியுள்ளது. உலக சாம்பியனாக ஒருவர் மட்டுமே இருக்க முடியும். தனி நபர் ஒருவருக்காக ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக விதிகள் மாற்றப்படுகின்றன’ என அவர் கூறியுள்ளார்.












