அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களுக்கான ஏலத்தில் இடம்பெற்றுள்ள 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதுள்ள கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
204 வீரர்களை தேர்வு செய்ய ஜெட்டா நகரில் நடக்க உள்ளது மெகா ஏலம். இந்த ஏல நிகழ்ச்சியை மல்லிகா சாகர் இந்தாண்டும் தொகுத்து வழங்க இருக்கிறார். 574 பேரில் இருந்து 70 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கின்றனர். வீரர்கள் பட்டியலில் 13 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தவர் வைபவ். இடதுகை ஆட்டக்காரரான வைபவ், பிகாரைச் சேர்ந்தவர். வைபவ் சூர்யவன்ஷியை பொறுத்தவரை, ஐபிஎல் ஏல வரலாற்றில் பங்கேற்கும் மிக இளம் வயது வீரர் ஆவார். பட்டியலில் 68வது செட்டில் 491வது இடத்தை பிடித்துள்ளார். அன்கேப்ட் வீரராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவருக்கு அடிப்படை தொகை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிகாரின் தாஜ்பூர் கிராமத்தில் 2011- ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்த வைபவ், தனது கிரிக்கெட் பயணத்தை 9 வயதில் தொடங்கினார்.
கிரிக்கெட் மீதான காதல், அவரது தந்தையிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தையே தொடக்கத்தில் வைபவுக்கு பயிற்சி தந்து வந்தார். பின்னர் தலைநகர் பாட்னாவுக்கு சென்று முறையான பயிற்சிகளை தொடங்கினார்.
முதலில் 12 வயது சிறுவனாக பிகார் U19 க்கான வினு மங்கட் டிராபியில் விளையாடினார் வைபவ். இடது கை பேட்ஸ்மேனான வைபவின் நிதானம் மற்றும் முதிர்ச்சியான ஆட்டம், கடந்த ஜனவரியில் மும்பைக்கு எதிரான ரஞ்சி டிராபியில் பிகார் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று தந்தது. இதன் மூலம், முதல்தர விளையாட்டில் மிக குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர்கள் என்ற அலிமுதீன், யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார்.
பின்னர், கடந்த செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது முதல் சர்வதேச போட்டியில் வெறும் 58 பந்துகளில் சதம் அடைத்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்களில் அவுட் ஆனார். U19 கிரிக்கெட் வரலாற்றில் 2005 இல் மொயீன் அலி 56 பந்துகளில் அடித்த சதத்துக்கு பிறகு பதிவான இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும்.
13 வயதான சூர்யவன்ஷி, ரஞ்சி போட்டிக்கு பிறகு பேட்டி ஒன்றில் தனது வயது 14 என்று கூறியிருந்தார். இதனால், அவரது அதிகாரப்பூர்வ பிறந்த தேதி குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன.












