நேற்று முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாகாமல் நிரப்புவதற்காக கட் ஆஃப் பெர்சன்டைலை ஒன்றிய அரசு குறைத்து இருக்கிறது. இதனால் மருத்துவ இடங்கள் கோடிக்கணக்கில் விற்பனை மோசடிகான கதவுகள் திறந்திருப்பதாக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பட்டில் இயங்கும் மருத்துவ கலந்தாய்வு குழு முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நீட் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்யம் பெர்சன்டைலாக குறைக்கப்படுவதாக கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தது.
இதனால் முதுநிலை நீட் தேர்வு எழுதியவர்கள் பூஜ்யம் மதிப்பெண் பெற்று இருந்தாலும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவானது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாகாமல் நிரப்புவதற்காக கட் ஆஃப் பெர்சன்டைலை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உயிரி வேதியியல், உடற்கூறியல், ப்ரீ-கிளினிக்கல், பாரா கிளினிக்கல் பாடப் பிரிவுகளில் அதிகமான காலி இடங்கள் இருப்பதாகாவும், அதனை நிரப்புவதற்காக பெர்சன்டைல் குறைக்கப்படுவதாக மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
மருத்துவ கலந்தாய்வு தொடக்கத்தில் பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தாக்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 50 பெர்சன்டைல் மற்றும் எஸ்.சி./எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 பெர்சன்டைல் இருந்தது. தற்போது பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தேர்வர்களுக்கு 15 பெர்சன்டைல் என்றும், எஸ்.சி./எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 10 பெர்சன்டைல் என்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் குறைத்துள்ளது. பெர்சன்டைல் குறைக்கப்பட்டுள்ளதால் முதுநிலை மருத்துவ இடங்களில் நிரப்புவதற்கு கோடிக்கணக்கில் விற்பனை மோசடிக்கான கதவுகள் திறந்திருப்பதாக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












