மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, சமீபத்தில் கிரிநகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இல்லத்தரசிகளுடன் கலந்துரையாடும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மேலும், ‘‘சில நாட்களுக்கு முன் உள்ளூர் காய்கறி சந்தைக்கு சென்றேன். அங்கிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினேன். சாமானியர்களின் பட்ஜெட் எவ்வாறு மோசமடைந்துவருகின்றது, பணவீக்கம் எவ்வாறு அனைவரையும் பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விற்பனையாளர்களிடமும் பேசினேன். பொதுமக்கள் விலைவாசி உயர்வால் போராடி வருகின்றனர். அன்றாட தேவைகளின் சிறிய விஷயங்களில் கூட அவர்கள் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
பூண்டு, பட்டாணி, காளான் மற்றும் இதர காய்கறிகளின் விலைகளை நாங்கள் விவாதித்தோம். மக்களின் உண்மையான அனுபவங்களை கேட்டறிந்தேன். பூண்டு கிலோ ரூ.400, பட்டாணி கிலோ ரூ.120 அனைவருடைய பட்ஜெட்டையும் அசைத்துவிட்டது. மக்கள் என்ன சாப்பிடுவார்கள், எதை சேமிப்பார்கள் என்று யோசித்தேன். ஒரு காலத்தில் பூண்டின் விலை ரூ.40ஆக இருந்தது. ஆனால் இன்று? கிலோ ரூ.400. பணவீக்கம் சாமானியரின் சமையல் அறையின் பட்ஜெட்டை கெடுத்துவிட்டது. ஆனால் ஒன்றிய அரசோ கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.












