விஜய் ஹசாரே கோப்பைக்கான அரையிறுதிக்கு, ஹரியானா, விதர்பா அணிகள் தகுதி பெற்றுள்ளன. விஜய் ஹசாரே கோப்பைக்கான முதல் காலிறுதிப் போட்டியில் குஜராத் அணி முதலில் களமிறங்கியது. 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 196 ரன் எடுத்தது. பின், 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஹரியானா அணி, 44.2 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ஹரியானா அணி, வரும் 15ம் தேதி, வதோதராவில் நடக்கும் போட்டியில் கர்நாடகாவுடன் மோதவுள்ளது. நேற்று நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் ராஜஸ்தான், விதர்பா அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது.
அந்த அணியின் சுபம் கர்வால் 59, கார்த்திக் சர்மா 62 ரன் குவித்தனர். பின், 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விதர்பா களமிறங்கியது. துவக்க வீரர் துருவ் ஷோரி சிறப்பாக ஆடி அவுட்டாகாமல் 118 ரன் குவித்தார். யாஷ் ரத்தோட் 39ல் வீழ்ந்தார். கேப்டன் கருண் நாயர் 82 பந்துகளில் 5 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 122 ரன் எடுத்து அணியை, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இதையடுத்து அரையிறுதிக்குள் நுழைந்த விதர்பா அணி, வரும் 16ம் தேதி மகாராஷ்டிரா அணியுடன் களம் காணவுள்ளது. இறுதிப் போட்டி, வரும் 18ம் தேதி வதோதராவில் நடக்கும்.












