புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், மத்தியபிரதேசம் உட்பட நாடு முழுவதிலும் சட்டவிரோத மணல் குவாரிகள் நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றமும் நடைபெறுகிறது. எனவே சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரத்தில் நடைபெறும் ஊழலை வெளிக்கொண்டு வரும் விதமாக அதனை முழுமையாக சிபிஐ விசாரணை அமைப்புக்கு மாற்றி அமைத்திட ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் 5 ஏக்கருக்கு மேலான பரப்பில் மணல் எடுக்கும்போது பொதுமக்கள் கருத்து கேட்பும் நடத்த வேண்டும். குறிப்பாக மணல் எடுக்கும் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட மேற்கண்ட அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும், ஒரு கோரிக்கையை நீதிபதிகள் முன்பு வைத்தனர். அதில், ‘இந்த விவகாரத்தில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், அவகாசம் வழங்கி வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று முறையிட்டனர். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 3வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












