நடிகர் தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நயன்தாரா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ள ஆவணப்படத்தில் என் வாழ்க்கையில் முக்கிய படமான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான்-ஐ சேர்க்க முடியாமல் போனது மற்றும் அந்த படத்தின் புகைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு 2 வருடங்களாக உங்கள் பின் அலைந்தோம்.ஆனாலும் இறுதிவரை அது நடக்கவில்லை. அந்த படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என நீங்கள் மறுத்தது என் மனதை நொறுக்கியது.சமீபத்தில் வெளியான ட்ரைலரில் இருக்கும் 3 விநாடி காட்சிக்கு எதிராக Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.
3 விநாடி வீடியோவுக்கு நீங்கள் கேட்கும் காப்புரிமை நீதிமன்றத்தில் சரியாக இருக்கலாம், தார்மீக அடிப்படையில் தவறானது. நீங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். நான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பொய்யாக திரித்து, ஒரு கதையை உருவாக்கி அதில் சில ‘பஞ்ச் வசனங்களை’ சேர்த்து அடுத்த இசைவெளியீட்டு விழா மேடையில் நீங்கள் பேச வாய்ப்பு உள்ளது. ஆனால் அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களின் நடவடிக்கையால் நானும் எனது கணவர் விக்னேஷ் சிவனும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நானும் ரவுடிதான் பாடல் இல்லாமலேயே திருமண ஆவணப்படம் வெளியாகிறது. நீங்கள் உங்கள் தந்தை, சகோதரரின் ஆதரவில் சினிமாவில் வந்து வளர்ந்தவர். உங்களைப் போல சினிமா பின்னணியில் இருந்து வந்தவள் நான் அல்ல.
ஆனால் திரைத்துறையில் நான் எந்த ஆதரவும் இல்லாமல் தனிப்பட்ட உழைப்பால் வளர்ந்து வந்துள்ளேன். எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது . அநாகரிகமான அந்த செயல்களைச் செய்வது உங்களைப் போன நடிகரே ஆனாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசுவதற்கும் உங்கள் செயல்பாட்டுக்கும் சிறிதும் தொடர்பில்லை. அடுத்தவர்களின் துயரத்தில் சந்தோஷப்படுபவர் நீங்கள். என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த நானும் ரவுடிதான் படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.இனியாவது அடுத்தவர்களின் துயரத்தில் மகிழ்ச்சி அடைவதை நிறுத்திக் கொள்ளுங்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.












