இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புகளை செல்லப் பிராணிகளாக மக்கள் வளர்த்து வருகிறார்கள். அந்த கிராமம் எங்குள்ளது மற்றும் அதை வளர்ப்பதற்கான காரணத்தை பார்ப்போம்.
அழகிய நிலப்பரப்புகள் மற்றும் அழகான கிராமங்களுக்கு பெயர் பெற்றது நம்முடைய இந்தியா. மகாத்மா காந்தி “நம் நாட்டின் ஆன்மா அதன் கிராமங்களில் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த நவீன மற்றும் டிஜிட்டல் யுகத்தில் கூட நாட்டின் பல்வேறு கிராமங்களில் தற்போதும் வினோதமான சடங்குகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் குக்கிராமத்திற்கும் அதன் சொந்த மரபுகள் மற்றும் கதைகள் உள்ளன. ஆனால் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷெட்பால் கிராமம் இதுவரை நீங்கள் கேள்விப்படாத விசித்திரமானதாக இருக்கலாம்.
ஷெட்பால் கிராமம் புனேவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த குக்கிராமத்தின் சிறப்பு என்ன என்று உங்களுக்கு தெரியுமா?. இந்த கிராமத்தில் பாம்புகளை வழிபடுவது மட்டுமின்றி, அங்குள்ள மக்கள் தங்களுடன் நிரந்தரமாக வாழ இடமும் அளிக்கிறார்கள். உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியன் கோப்ரா எனப்படும் நாகப்பாம்புகளுடன் வாழ்வதாக கூறப்படுகிறது.
வினோத பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள காரணம்?
பாம்புகளின் கிராமம் என்று குறிப்பிடப்படும் ஷெட்பால் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் இருக்கும். இந்த பாம்புகள் அங்கிருக்கும் வீடுகளில் மட்டுமல்ல, வயல்கள், மரங்கள் மற்றும் கிராம மக்களின் படுக்கையறைகளிலும் கூட சகஜமாக காணப்படுகின்றன. இப்படி எங்கெங்கு காணினும் பாம்புகள் இருக்கும் நிலையில், கிராம மக்கள் இந்த பாம்புகளுக்கு சிறிதும் பயப்படுவதில்லை. மாறாக அவற்றுடன் விளையாடுவதாக கூறப்படுகிறது.
ஷெட்பால் கிராம மக்கள் பாம்புகளை வழிபடுவது மட்டுமின்றி, அவற்றுக்காக தங்கள் வீடுகளில் பிரத்யேக அறையை உருவாக்கி வைத்துள்ளனர். ஷெட்பால் கிராம மக்களின் குடும்ப உறுப்பினராகவே பாம்புகள் காணப்படுகின்றன மற்றும் வீடுகளில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுகின்றன. குழந்தைகள் கூட பாம்புகளை கண்டு அஞ்சாமல் விளையாடுகிறார்கள். ஷெட்பால் கிராம மக்கள் பாம்புகள் சிவனின் அடையாளம் என்று நம்புகிறார்கள். ஆகையால் தான் இவர்கள் பாம்புகளை வணங்குகிறார்கள் மற்றும் அவற்றை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே கருதுகிறார்கள். பாம்புகளை கடவுளாக வழிபடும் பல கோயில்களும் இந்த கிராமத்தில் உள்ளன.
இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் “தேவஸ்தானம்” என்று அழைக்கப்படும் நாகப்பாம்புகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பு பகுதி உள்ளது. “தேவஸ்தானம்” என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். இது இரண்டு வார்த்தைகளால் ஆனது. தேவ மற்றும் ஸ்தானம். அதாவது இதற்கு அர்த்தம் கடவுளுக்கான இடம் என்பதாகும். அதேபோல இந்த கிராமத்தில் புதிதாக வீடு கட்டும் போதெல்லாம் அதில் நாகப்பாம்புகளுக்கு இடம் ஒதுக்க மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதும் சுவாரஸ்யமான விஷயமாகும். பாம்புகளும் மனிதர்களை போன்ற ஒரு உயிரினம் தான். அவை மக்களிடம் இருந்து அன்பையும் மரியாதையையும் பெற விரும்புவதாக ஷெட்பால் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.












