கடந்த 14-ந் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகாவின் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதையடுத்து, இலங்கையின் புதிய மந்திரிசபை இன்று பதவியேற்றது. அதிபர் செயலகத்தில் அதிபர் திசநாயகா முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். மேலும் அதிபர் திசநாயகா முன்னிலையில் புதியஅமைச்சரவையும் பதவியேற்றது. இதில் இலங்கையின் வெளிவிவகாரத் துறை மந்திரியாக விஜித ஹேரத் பதவியேற்றுக் கொண்டார். மகளிர் மற்றும் சிறுவர் நலத் துறை மந்திரியாக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார்.
கடற்தொழில் நீரியல் வழங்கல் மந்திரியாக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது.











