*தூர்வாரி பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திர சோழன் என்கிற தெற்கிருப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் குறைந்தளவே காணப்பட்டன. அங்கு பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான குளம் மட்டுமே இருந்துள்ளது.
அதில் தேங்கும் ஊற்று நீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளது. பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் பெருக்கம் அதிகரிக்கவே இந்த குளம் ஆக்கிரமிப்பிற்குள்ளானது. தற்போது இங்கு ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்டன. இதனால் இந்த குளம் கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதியாக மாறிவிட்டது. தற்போது இந்த குளத்தின் நீரை யாரும் பயன்படுத்துவதில்லை.
இருந்த போதிலும், எந்நேரமும் இந்த குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குளம் முழுவதும் பாசி படிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீரை அகற்றி, தூர் வாரினால் குளம் தூய்மையாகும். அதன்பின், இந்த நீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில். எங்கள் பகுதியில் உள்ள இந்த பிள்ளையார் கோயில் குளம் பல வருடங்களாக உள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வடவாறு, சின்ன வாய்க்கால் மூலம் தொட்டி மதகு வழியாக வருகிறது.
இதனால் இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு குளத்திற்கு அருகில் வீடுகள், கடைகள் வந்தன. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளது.
இதனால் குளத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் அப்பகுதி குடியிருப்பு கழிவுநீரும் இந்த குளத்தில் தான் கலக்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு, பெரியோர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.












