அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நெசவாளர்களில் பலர், தாங்கள் வாழும் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி வருகின்றனர். இவர்களை கணக்கீடு செய்து அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில்வரி விதிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக, சேலம் மாநகராட்சி பகுதிகளில் இதுபோன்ற குடிசை தொழில் செய்துவரும் நெசவாளர்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களை மாநகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்து வருவதாகவும், சதுர அடிக்கு 27 ரூபாய் தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் தெரிவித்த செய்தி, நெசவாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அதிமுக தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எனவே, தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












