சென்னை : சென்னை பூந்தமல்லியில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் முல்லைத் தோட்டம் வரையிலான 2.5 கிமீ தூரத்திற்கான தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது.இதனால் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் பேரில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி முதல் முல்லைத் தோட்டம் வரை வெற்றிகரமாக நள்ளிரவில் நடத்தப்பட்டது.
இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம்நிலையம் வரை சுமார் 3 கி.மீ. நீளம் கொண்டது, இது பூந்தமல்லி பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ இரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும்.படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்குபுதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்த ஆண்டு இறுதியில் பூந்தமல்லி முதல் போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக்அவர்கள், ” மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் நடத்தப்பட்ட முதல் வழித்தட சோதனை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்று கூறினார்.












