ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்ததாகும் ஆனால் கார்த்திகை மாதத்தில் மாதம் முழுவதுமே சிறப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் சிவ பெருமானுக்கு உகந்த மாதமாக இருந்தாலும் இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாட்களும் பக்தர்கள் ஒவ்வொரு கடவுள்களை வேண்டி விரதமிருந்து வழிபடுவார்கள். மேலும் கார்த்திகை மாதத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சாமிக்கு மாலை அணிவார்கள்.
அந்த வகையில் நவ.16 கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் நவ.18 ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி சிவன் கோவிலில் அதிகாலை முதல் மாலை அணிந்து வந்தனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மண்டல பூஜைக்காக ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி யாத்திரை செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் போது பக்தர்கள் மாலை அணியத் தொடங்கி விரதம் மேற்கொள்வார்கள். மேலும் ஐயப்ப பக்தர்கள் அவர்களது பகுதியில் உள்ள கோவில்களில் குருசாமி மூலம் மாலையணிவதுண்டு.
அதன் அடிப்படையில் கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் இன்றும் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று குருசாமி மற்றும் அர்ச்சகர் மூலம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.












