சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க, மார்ச் 5ம் தேதி அன்று திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, தமிழக பாஜவை அழைத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைத்திருந்த உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களை, இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமீபத்திய தமிழக வருகையின் போது கூட, தொகுதி மறுவரையறையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்றும், தொகுதி மறுவரையறை என்பது, விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். தொகுதி மறுவரையறைக்கான அறிவிப்பு, தொகுதி மறுவரையறை ஆணையத்தினால் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொதுமக்களுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள். இது ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5ம் தேதி கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு 20 மடங்கு அதிகரித்து, ₹1,68,585 கோடியாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












