புதுச்சேரி போக்குவரத்து துறையில் கடந்த ஆண்டு 65 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.136 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இருக்கக்கூடிய மின்சார வாகனங்களின் பக்கம் பொதுமக்களின் பார்வை சமீபகாலமாக திரும்பி இருக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன.
குறிப்பாக குறைந்த செலவிலான மின்சார வாகனங்களை உருவாக்குவது, தரமான சார்ஜிங் மையங்கள் அமைப்பது, பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்களை உருவாக்குவது முக்கியமனதாக இருக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மின்சார வாகனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 49.65 லட்சமாக அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்துத் துறை இணையதள பதிவேடு விவரங்களின்படி, புதுச்சேரியில் மட்டும் 14.23 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் கடந்த 2024ல் மட்டும் புதுச்சேரி போக்குவரத்து துறை மூலம் வெளி மாநிலத்தவர், உள்ளூர் மக்கள் மூலம் சுமார் 65,285 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டை விட 17.89 சதவீதம் அதிகம். இதில் இரண்டு சக்கர வாகனம் 50,245, கார் 12,368 மற்றும் 2,672 இதர வாகனங்கள் புதுச்சேரி போக்குவரத்து துறையில் பதிவாகி உள்ளது.
இந்த வாகன பதிவு எண்ணிக்கையில் பெட்ரோல் (50,505), டீசல் வாகனங்கள் (3,857) அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2024ம் ஆண்டு மட்டும் 3,190 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டை விட 20.95 சதவீதம் அதிகமாகும்.
இதன் மூலம் புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடந்த 2024ம் ஆண்டு ரூ.136.29 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டை விட 25.22 சதவீதம் அதிகமாகும்.
- இந்தாண்டு வாகனங்களுக்கான வரி உயர்த்த திட்டம்
புதுச்சேரியில் கடந்த 2018 டிசம்பர் முதல் வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டு, தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக வாகனங்களுக்கான வரியை அரசு உயர்த்தவில்லை. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு போக்குவரத்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளது.
இந்நிலையில் வருவாயை பெருக்கும் நோக்கில், வாகனங்களுக்கான வரியை இந்தாண்டு உயர்த்த போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஆனால் எத்தனை சதவீதம் உயர்த்துவது என்பதில் இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. எனவே வாகனங்களின் வரி உயர்த்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












