மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 1,19,374 வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 2,958 பேர் மட்டுமே தாய் நாட்டுக்கு வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்தினர் என்பது தெரியவந்துள்ளது.
மக்களவை தேர்தல் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,இந்தாண்டு மொத்தம் 1,19,374 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். இதில், கேரளாவை சேர்ந்தவர்கள் 89,839 பேர். ஆனால் மக்களவை தேர்தலில் 2,958 பேர் மட்டுமே இந்தியாவுக்கு பறந்து வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்தினர். அதில் பெரும்பாலானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். அந்த மாநிலத்தை சேர்ந்த 2,670 பேர் வாக்களித்துள்ளனர். உபி,தமிழ்நாடு, பீகார், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் வாக்கு செலுத்த விருப்பம் காட்டவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 3,432 வெளிநாட்டு வாழ் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,805 பேர் ஆண்கள், 627 பேர் பெண்கள். ஆனால், இவர்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. பிரதமரின் சொந்த மாநிலம் குஜராத்தில் 885 வாக்காளர்களில் வெறும் 2 பேர் மட்டுமே இந்தியாவுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 5,097 பேரில் 17 பேர் வாக்களித்துள்ளனர். ஆந்திராவில் 7,927 பேரில் 195 பேர் வாக்களித்தனர் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 3,432 வெளிநாட்டு வாழ் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.












