கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்புமனுதாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்பு மனுத்தாக்கலின்போது சுயேட்சை வேட்பாளர்களான பத்மராஜன், நூர்முகமது, மதுரை விநாயகம் ஆகிய 3 பேரும், நூர்முகமது மட்டும் 2 வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். 2வது நாளான கடந்த 13ம் தேதி சுயேட்சை வேட்பாளர்களான ராஜசேகரன், கோபாலகிருஷ்ணன், மணி, ஆனந்த், முகமது கபீர், இசக்கி முத்து ஆகிய 6 பேரும் என 9 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளையொட்டி, மாநகராட்சி அலுவலக வளாகம், நுழைவு வாயில் பகுதியில் ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் டிஎஸ்பி முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கோமதி, அனுராதா மற்றும் போலீஸ் எஸ்ஐக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருபவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்த பிறகே அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
அதன்படி, நேற்று இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார் நேற்று கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரகுமார் 4 வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி அமுதாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சீதாலட்சுமியும் 3 வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, பதிவு பெற்ற கட்சிகள் சார்பில் அகில இந்திய எம்ஜிஆர் ஜனநாயக கட்சி சார்பில் சேலம் ஆத்தூர் முல்லைவாடி ராஜமாணிக்கம், இந்திய கன சங்கம் சார்பில் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம், சென்னை கொளத்தூரை சேர்ந்த அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ரவி, கோவை சோமனூரை சேர்ந்த இந்திய கன சங்கம் கட்சியின் மாற்று வேட்பாளராக நாகராஜன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு சார்பில் அக்னி ஆழ்வார் என சுயேட்சைகளாக அடுத்தடுத்து ஏராளமானோர் மனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நேரமான 3 மணிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்பேரில் மாநகராட்சி நுழைவு வாயிலின் இரும்பு கேட் அடைக்கப்பட்டு, அதன்பிறகு உள்ளே எந்த வேட்பாளரையும் அனுமதிக்கவில்லை. அதேபோல், மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களுடன் அலுவலக கதவையும் தேர்தல் நடத்தும் அலுவலரே நேரடியாக வந்து மூடினார். தொடர்ந்து, அலுவலகத்திற்குள் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் கதவுகள் அடைக்கப்பட்டு வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் 49 பேர் 55 மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தமாக 58 பேர் 65 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று (18ம் தேதி) நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை 20ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட்டு, வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவும் 8ம் தேதி சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
- மான் பிரசாரத்துக்கு தடை கோரி தேர்தல் அலுவலர், எஸ்பியிடம் மனு
ஈரோடு பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி தலைமையில் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விளம்பரத்துக்காகவும், சுய லாபத்துக்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இனம், மொழி அடிப்படையில், பிரிவினைவாத கருத்துகளை பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 2023 ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டமன்றத் தேர்தலின்போது, தலித் மக்களுக்கு எதிரானவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தலித் மக்களுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அருந்ததியர் சமூகம் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும், தேர்தல் பிரசார கூட்டத்திலும் கொச்சைப்படுத்திப் பேசினார். இதனால், மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு, அந்த தேர்தலின்போது இரு தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, கலவர சூழல் உருவானது. இதனால் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சமீப நாட்களாக தந்தை பெரியார் குறித்த அவதூறான கருத்துகளை சீமான் பேசி வருகிறார். அவர் மீது பல்வேறு பெரியாரிய அமைப்பினர் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட புகார்களும், தமிழ்நாடு முழுவதும், 70க்கும் மேற்பட்ட புகார்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில் பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை அறிவித்து மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ள சீமான், தேர்தல் பிரசாரத்தின்போது பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி, மக்களிடையே கலவரத்தை தூண்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
எனவே, சீமான் மீது உரிய வழக்குகளை பதிவு செய்வதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படியும், சீமான் ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்திட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த அமைப்பினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடமும் மனு அளித்தனர்.
ஈரோடு இடைத்தேர்தல் தவெக புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. களத்தில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த சூழலில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை’ என த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
- நாதகவினர் 8 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு வஉசி பூங்காவில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் விழாவை ஏராளமான பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, 3 பேர் அவர்களது முதுகில் பெரிய அளவிலான போர்டு கட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே தட்டிகளை ஏந்தியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதகவினர் மீது நிலை கண்காணிப்பு குழுவினர் அளித்த புகாரின்பேரில், கட்சியின் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட 5 பேர் மீது ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












