என்ஆர்சியில் பதிவு செய்யாதவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படாது என்று அசாம் அரசு அறிவித்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தப்படுத்துவதற்காக, என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கும் விதமாக, அசாமில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்யாதவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களில் அசாம், திரிபுரா போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர், சட்டவிரேதமாக குடியேற முயன்றவர்களை கைது செய்துள்ளனர். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவது எங்களுக்கு கவலையளிக்கிறது. நமது கட்டமைப்பை பலப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் ஆதார் கார்டு விநியோகம் கடுமையாக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த முடிவு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.











