Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
ஆன்மிகம்

திருக்குளக்கரை விநாயகர்….

Email :18

ஆலயங்களுக்கு முறையாக வழிபடச் செல்பவர்கள் கோயில் திருக்குளங்களில் நீராடித் திருமேனியைத் தூய்மை செய்து கொண்டு விபூதி அணிந்து பஞ்சாட்ர ஜெபம் செய்த பின்னரே ஆலயத்திற்குள் செல்வது வழக்கம். அன்பர்கள் நீராடித் தூய்மை பெற, ஆலயங்களின் அருகில் தீர்த்தக் குளங்கள், பொய்கைகள், பெருங்கிணறுகளை அமைப்பது வழக்கம். இவ்வகையில் அமைந்த திருக்குளங்களின் கரையில் விநாயகரையும் அமைத்துள்ளனர். நீராடிய பின் அன்பர்கள் விபூதி அணிந்து கொள்ள வசதியாக இந்த விநாயகர் முன்பாக விபூதிமடலை வைப்பதும் வழக்கம். இந்தக் குளக்கரை விநாயகரைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரை விளக்குகிறது.

ஆலயத்திற்குச் சொந்தமான குளங்களின் கரையில் அரசமரமும் அதனடியில் பிள்ளையாரையும் வைத்து வழிபடுகின்றனர். குளத்தில் நீராடியபின் இந்த விநாயகரை வணங்குவது வழக்கம். பெருங்கோயில்களில் அமையும் குளத்தின் கரையில் அரசமரமின்றி விநாயகர் ஆலயங்களை அமைக்கின்றனர். இவரைக் “குளக்கரை பிள்ளையார்’’ என்று அழைக்கின்றனர். சில தலங்களிலுள்ள குளக்கரை விநாயகர் வரலாற்றுப் புகழ் பெற்றவராக விளங்குகிறார். எடுத்துக்காட்டாகத் திருப்புன்கூர் சிவலோகநாதர் ஆலயக் குளக்கரையில் அமைந்திருக்கும் குளம் வெட்டிய பிள்ளையாரைக் கூறலாம். சோழநாட்டுத் திருத்தலம் திருப்புன்கூர். இது வைத்தீசுவரன் கோயிலுக்கு மேற்கில் 3 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ளது.

இவ்வூரில் உள்ள சிவலோக நாகநாத சுவாமி ஆலயத்தின் மேற்கில் பெரிய குளமும், அதன் கரையில் விநாயகர் ஆலயமும் உள்ளன. இதிலுள்ள பிள்ளையாரைக் குளம் வெட்டிப் பிள்ளையார் என்றழைக்கின்றனர்.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்குபவர் திருநாளைப் போவார். இவரை நந்தனார் என்றும் அழைப்பர். இவர், விவசாயத் தொழில் புரிந்தவர். சிவாலயங்களைத் தேடிச் சென்று தரிசிப்பவர். ஒரு சமயம் இவர் திருப்புன்கூருக்கு வந்தார். அந்நாளில் சில மக்களுக்குக் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி இல்லாதிருந்தது. எனவே, அவர் கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்று சுவாமியை வணங்கினார். அங்கே சுவாமிக்கு முன்பிருந்த நந்தி பெரியதாக கருவறையை மறைத்துக் கொண்டிருந்தது. அதனால் நாயன்மாரால் கருவறையில் இருக்கும் சிவபெருமானைத் தரிசிக்க முடியவில்லை. அதனால் அவர் மனம் வருந்தி, இந்த மாடு வழி மறிக்கிறதே என்று எண்ணினார். அவரது அன்பில் நெகிழ்ந்த இறைவன், இடப தேவரை (நந்தியை) சற்றே விலகி இருக்கும்படிப் பணிந்தார். உடனே நந்தி வடபுறம் நகர்ந்தார்.

நந்தனார் இறைவனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். மேலும், சில நாட்களில் அங்கேயே தங்கி இருந்தார். அனைத்து ஆலயங்களிலும் குளங்களையும் அதன் கரையில் விநாயகரையும் கண்டு மகிழ்கிறோம். திருவெண்காடு மெய் கண்ட விநாயகர், திருவாரூர் மாற்றுரைத்த பிள்ளையார், மதுரை பொற்றாமரைக் குளத்து விநாயகர் போன்ற எண்ணற்ற குளக்கரை விநாயகர்கள் வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

திருப்பெருந்துறை ஆலயத்தின் முன்பாக தேவதீர்த்தம் (நெல்லியடி தீர்த்தம்) என்னும் பெரிய திருத்தலம் அமைந்துள்ளது. இதன் வடகரையில் கிழக்கு நோக்கியவாறு வல்லபை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதில் பத்து கரங்களுடன் வல்லபையை மடியில் ஏந்தியவாறு விநாயகர் எழுந்தருளியுள்ளார். இக்கோயில் பெரியதாக விமானத்துடன் விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts