நவக்கிரகங்களைப் பற்றி நாம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதைவிட தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். நவக்கிரகங்கள் என்பது நம்முடைய வினைகளை தீர்மானிக்கின்ற கிரகநிலைகள். நவக்கிரகங்களுக்கு நவகிரக பதவி கொடுத்து அந்தந்த வினைகளுக்கு தகுந்தவாறு நியாயம் செய்ய நியமித்திருப்பவன் இறைவன். எனவே தனியாக நவககிரகங்களை பூஜை அறையில் வைத்து வழிபடும் பழக்கம் இல்லை. அதை யாரும் சொல்லவும் இல்லை. எல்லா கோயில்களிலும் சுப்ரபாதம், கௌசல்யா சுப்ரஜா என்று ஆரம்பிக்கிறது என்ன காரணம்? கௌசல்யா சுப்ரஜா என்ற ஸ்லோகம் ராமாயணத்தில் உள்ளது. ராம லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஸ்வாமித்திரமுனிவர் காட்டிற்குச் செல்லுகின்றார்.
அங்கே ராமரும் லட்சுமணரும் நதிக்கரை ஓரத்தில் புல்லணையின் மீது தூங்குகின்றார்கள். அவர்களை அதிகாலை எழுப்புவதற்காக வருகிறார், விஸ்வாமித்திரர். ‘‘சந்தியாவந்தன நேரம் வந்துவிட்டது. நீ காலைக் கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும். கௌசல்யா புதல்வனே, ராமா, எழ வேண்டும்’’ என்ற அர்த்தத்தில் விஸ்வாமித்திரர், பாடினார். முதல் சுப்ரபாதம் இப்படி அமைந்துவிட்டதால், பெரும்பாலும் எந்தக் கோயிலுக்கு சுப்ரபாதம் எழுதினாலும், இந்த ஒரு ஸ்லோகத்தை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு,அந்தந்த கோயிலுக்குரிய மற்ற விஷயங்களை இணைத்து சுப்ரபாதம் இயற்றும் வழக்கம் வந்துவிட்டது.








