அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 23ம் தேதி இரவு 7.45 மணியளவில் ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்கின்ற செயல்பாட்டினை செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். அதோடு பாலியல் சீண்டல் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும் அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும் அந்த மாணவி புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த சார் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் சுமார் 70 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதாக அதில் 56 சிசிடி கேமராக்கள்தான் வேலை செய்வதாகவும் தெரிவிக்கிறார்கள். மற்றவை ஏன் இயங்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார்.
- ஆளுநரை சந்திக்க உள்ளோம்..
அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி, ‘‘என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேளுங்கள். அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரிடம் கேளுங்கள். தமிழகத்தில் நடைபெறும், கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் விரைவில் முறையிட உள்ளோம்’’ என்றார்.












