இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் 3-1 என இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,
*உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும்.
*போட்டிகளின் போது அனைத்து வீரர்களும் அணியுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும். தனியாக பயணம் செய்ய கூடாது.
*குறிப்பிட்ட அளவு உடைமைகளையே கொண்டு வர வேண்டும், அதை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் வீரரே அதன் செலவை ஏற்க வேண்டும்.
*மேலாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களை வீரர்கள் உடன் அழைத்து வரக்கூடாது.
*பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது. அனைத்து வீரர்களுடனும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
*போட்டிகள் நடைபெறும் காலத்தில் தனிப்பட்ட விளம்பர படப்பிடிப்புகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி இல்லை.
*விதிமுறைகளில் தளர்வுகள் ஏதும் வேண்டும் எனில் பயிற்சியாளர், கேப்டன், தேர்வுக்குழு உள்ளிட்டோரின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












