மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் சனிக்கிழமையன்று நிகாம்போத் காட் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை யமுனை நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனை பாஜ கடுமையாக விமர்சித்து இருந்தது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், மறைந்த மன்மோகன் சிங்கின் தகனத்திற்கு பிறகு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மன்மோகன் சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர்.
அவர்களுடன் கலந்துரையாடியபோது தகனம் செய்யும்போது குடும்பத்தினருக்கு எந்தவித தனிப்பட்ட உரிமையும் கிடைக்காததால், அஸ்தியை கரைப்பது என்பது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்வுபூர்வமான வலி மற்றும் கடினமான தருணமாகும். அவர்களுக்கு தனிப்பட்ட உரிமையை வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று உணரப்பட்டது. எனவே தான் அஸ்தி கரைப்பில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றார்.












