டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணமே அதிமுக எம்.பி. தம்பிதுரைதான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலில், “டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்து வாக்களித்ததே எல்லா பிரச்சனைக்கும் காரணம். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மூல காரணமாக இருந்ததே அதிமுகதான்.மதுரை அரிட்டாபட்டியில் ஒருபோதும் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது.
ஏலம் விட முயற்சித்தபோது அப்போதே எதிர்த்தது திமுக அரசு. எதிர்ப்பை மீறிதான் டங்ஸ்டன் ஏல நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்தபோதும் திமுக அரசு தொடர்ந்து எதிர்த்தது. தான் முதல்வராக உள்ளவரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். ஒன்றிய அரசு ஏலம் விட்டதை அடுத்துதான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நாங்கள் டங்ஸ்டன் சுரங்கத்தை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாநிலங்களவையில் சுரங்க சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததை அதிமுக மறுக்க முடியாது. டங்ஸ்டன் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட அதிமுக முயற்சி செய்து வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுக குளிர்காய நினைக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.












