அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழி போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவர் அணியின் சார்பில் வருகிற 25ம் தேதி (சனி) கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் ‘வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்’ நடைபெற உள்ளன. பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுடனும், மாணவர் அணி நிர்வாகிகளுடனும், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












