தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி பி.ஆர்.எஸ். கட்சி அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டத் தலைவர் கஞ்சர்லா ராமகிருஷ்ண ரெட்டி நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் அரசு குறித்து பல விமர்சனங்கள் செய்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் நேற்று பி.ஆர்.எஸ். கட்சி அலுவலகத்தில் நுழைந்து நாற்காலிகள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை உடைத்து சூறையாடினர். மேலும் உடனடியாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து பேசிய அவதூறு வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதலுக்கு முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உடல் ரீதியாகத் தாக்கி வருகின்றனர். தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானாவில் இந்திரம்மா ராஜ்ஜியம் என்ற பெயரில் ஒரு குண்டர்கள் ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் அவ்வாறு நடந்தால் அதற்கு உரிய பாடம் கற்பிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.












